என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
    • தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு ஒத்திவைப்பு.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொகுதியில் வாக்கா ளர்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில், தொகுதி யின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈ.வெ.ரா மரணத்தை தொடர்ந்து 2023-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைக்கப்பட்டனர்.

    கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    ஓட்டுக்குக்கு பணம் வழங்கப்பட்டது. அதனாலேயே அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். தற்போது நடக்க உள்ள தேர்தலில் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும்.

    இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ந்தேதி மனு அளித்தேன்.

    அதில், தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அதனை பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர், மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும். யார் தான் சலுகைகள் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர், மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

    • பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு.
    • சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பொடவூர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு நடை பெற்றது.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாநாட்டினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்கள் அனைத்து துறையிலும் இருக்க வேண்டும். பெண்கள் தற்போது பட்டம் பெற்று விட்டார்கள். தங்கபதக்கம் பெறுகிறார்கள். ஆனால் வேலை செய்யும் இடங்களில் அவர்களுடைய இடம் குறைவாகவே உள்ளது.

    பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளிடம் பேசுவேன். அப்போது பெண்கள் பலரும் கண்களில் கண்ணீருடன் நான் சென்னைக்கு சென்று படிக்க மாட்டேன் என்று கூறுவார்கள்.

    சென்னைக்கு சென்று படிப்பது பாதுகாப்பில்லை என்று தங்களது பெற்றோர் கருதுவதாக அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள். இதுதான் தற்போது இருக்கக்கூடிய பிரச்சனை.

    சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும். நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். படித்த பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

    இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மக்கள் காட்டிய அன்பின் மகிழ்வுடன் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன்.
    • உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எப்பாடு பட்டேனும் நிறைவேற்றித் தரும் உறுதியுடன் செயல்படும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு மாவட்டங்கள்தோறும் மக்கள் அளித்து வரும் ஆதரவினையும் வரவேற்பினையும் ஒவ்வொரு முறையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்.

    அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, பாராளுமன்றத்தில் கழகம் அதனை எதிர்த்து முழங்கியதுடன், மதுரை மாவட்ட மக்கள், வைகை-முல்லைப்பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்து-களையும் அறிந்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, "நான் முதல்-அமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது" என்ற உறுதியையும் வழங்கினேன்.

    டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பா.ஜ.க. அரசு பணிந்தபிறகு, மதுரை மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற உங்களில் ஒருவனான எனக்கு அவர்கள் அளித்த வரவேற்பையும், அவர்கள் பொழிந்த அன்பையும் கடந்த கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். மதுரை மக்கள் காட்டிய அன்பின் மகிழ்வுடன் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன்.

    உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதற்குக் காரணம், மக்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் செயல்படுவதுதான். அரசியல் கண்ணோட்டத்தில் எதிரணியினர் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், கழக அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தாலும், மக்கள் அவர்களைப் புறக்கணித்து தங்கள் நலன் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் பக்கமே நிற்கிறார்கள்.

    2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் ஆதரவு நமக்குத்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குகின்ற மக்களுக்கு என்றும் துணை நிற்போம். அவர்களின் ஆதரவுடன் ஏழாவது முறையாகத் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் என்ற வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்படும் இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 6, 7 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறேன். அப்போது உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • பிப்ரவரி 6, 7-ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.
    • யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.2-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசிக்கப்பட்டது.

    பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

    பிப்ரவரி 6, 7-ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.

    அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, பாராளுமன்றத்தில் தி.மு.க. எதிர்த்தது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்ற உறுதியையும் வழங்கினேன்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் ஆதரவு நமக்கு தான் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது என்று கூறினார்.

    இதையடுத்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,

    * அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்திட பாராளுமன்றத்தில் தி.மு.க. வலியுறுத்தும்.

    * ஆளுநர் பதவியை நீக்கும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காக்க நடத்தை விதி உருவாக்க வேண்டும்.

    * டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதல்வருக்கும் துணை நின்ற மக்களுக்கும் நன்றி.

    * சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.

    * மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த முறை தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும். புதிய ரெயில்வே திட்டங்கள், பேரிடர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    * யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.2-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
    • த.வெ.க. திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி த.வெ.க. மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று அதிகம் பேசப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்கள் இதற்கு மாறான சூழலை உணர்த்துகிறது.

    வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் உடன் தேர்தல் பணிகள் சார்ந்து மட்டும் பணியாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    • ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.
    • 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அதிமுக பிரமு கரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறை முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தார்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப் பட்டார்.

    இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராசு, ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் குவாரி உள்ளிட்ட வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைதான ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி புதுக்கோட்டை இரண்டாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒவ்வொருத்தரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    நீதிமன்றம் அனுமதிக்கும் நாட்களில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    • இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா?
    • இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் மு.க.ஸ்டாலின்?

    மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்த பெண்கள் அளித்த புகாரின்பேரில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை தி.மு.க. கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!

    ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,

    சட்டம் இருக்கிறதா?

    காவல்துறை இருக்கிறதா?

    தி.மு.க. கொடியோடு, இப்படியொரு பதைக்க வைக்கும் குற்றத்தை செய்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை, "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது" என்று காரில் சென்ற பெண்களைப் பார்த்து கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் பொறுக்கிகளின் பின்னணியில் தி.மு.க. அடையாளம் இருப்பதும், காவல் துறை மவுனம் காப்பதும் தொடர்வது வெட்கக்கேடு!

    இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா?

    இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் மு.க.ஸ்டாலின்? ஆதரவாளர்களா? அனுதாபிகளா?

    #SaveOurDaughters

    #பாலியல்பொறுக்கிகளை_விரட்டியடிப்போம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
    • பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமா வாசை, மஹாளாய அமா வாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

    காலை 11 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது. மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறு கிறது.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.


    அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணற்பரப்பில் அமர்ந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசையையொட்டி ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 740 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்தக் கடல், கோவில் பகுதிகளை சுற்றி

    லும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிபெ ருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை திரிவேணி சங்கமம் பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்களுக்காக பலிகர்ம பூஜை மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஏராமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    அங்கு தொடங்கி நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிகள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.


    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறைகள், கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்பு கார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரை யோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மதுரையில் வைகை கரை யோர பகுதிகள், சோழவந் தான் அருகேயுள்ள திருவே டகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந் துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.



    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களது பெயர் பட்டியல் மற்றும் சின்னங்கள் கடந்த 20-ந் தேதி ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்டன.

    அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட 'பேலட் ஷீட்'களை அச்சிடப்படும் பணிகளை தேர்தல் அலுவலர்கள் சென்னைக்கு நேரடியாக சென்று மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், அந்த பேலட் ஷீட்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி இன்று காலை 9.30 மணியளவில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கியது.

    இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி நுழைவாயில் வேட்பாளர்கள், முகவர்கள், செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.


    இதுபோல் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள், பெயர் சின்ன பொருத்தும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் முகவர்கள், கடும் சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் ஸ்ரீகாந்த் முன்னிலையில் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பேலட் ஷீட்களை பொருத்தும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

    ஈரோடு கிழக்குத் தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப் பதிவுக்காக கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்களையும் சேர்த்து 284 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பா ளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். கூடுதலாக கடைசியில் நோட்டாவுக்கான பட்டன் இருக்குமாறு வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 47 பட்டன்கள் தேவை உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் 3 எந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன.

    அதன்படி இந்த தேர்தலில் 237 வாக்குச்சாவடிகளிலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப் பதிவு எந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 852 வாக்குப்பதிவு எந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 308 விவி பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

    இதில் 852 வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வேட்பாளரின் பெயர், சின்னம் அச்சிடப்பட்டுள்ள பேலட் ஷீட்கள் பொருத்தப்படுகிறது. இன்று தொடங்கிய இந்தப் பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு மாநகராட்சி கூட்டரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    • நிதிநலக் குறியீடுகளில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி 11 இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
    • கடனைப் பொறுத்தவரை தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களுடன் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-ஆம்

    ஆண்டிற்கான நிதிநலக் குறியீடு என்ற ஆவணத்தின்படி, நிதி மேலாண்மையில் தமிழ்நாடு 11-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. செலவுகளின் தரம், கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14, 16-ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலை எழுந்திருக்கிறது.

    இந்தியாவின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்துத் தருவதற்கான நிதி ஆயோக் அமைப்பு 2022-23ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களின் நிதிநிலைமை குறித்து நிதி நலக் குறியீடு (Fiscal Health Index) என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. 7 வடகிழக்கு மாநிலங்கள், அசாம், உத்தரகாண்ட், இமாலயப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் தவிர மீதமுள்ள 18 மாநிலங்களின் நிதிநிலைமை குறித்து நிதி ஆயோக் வெளியிட்ட ஆவணத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. நிதிநலக் குறியீடுகளில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி 11 இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

    ஒடிசா மாநிலம் 67.8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு அதில் பாதிக்கும் குறைவாக 29.2 புள்ளிகளை மட்டுமே பெற்று முதல் 10 இடங்களில் வர முடியாமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. செலவுகளின் தரம் குறித்த வகைப்பாட்டில் 32 புள்ளிகளுடன் 14-ஆம் இடத்தையும், நிதி விவேகம், கடன் குறியீடு ஆகியவற்றில் முறையே 13-ஆம் இடத்தையும் தமிழ்நாடு பிடித்துள்ளது. கடன்களைத் தாக்குப் பிடிக்கும் தன்மையில் 64 புள்ளிகளுடன் ஒடிசா முதலிடம் பிடித்துள்ள நிலையில் தமிழ்நாடு 11.1 புள்ளி மட்டுமே பெற்று 16-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வகைப்பாட்டில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே தமிழகத்தை விட பின்தங்கியுள்ளன என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.

    செலவுகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வருவாய் செலவினங்களில் 52% ஊதியம், ஓய்வூதியம், கடன் வட்டி போன்ற உறுதிப்படுத்தப்பட்ட செலவுகளுக்கே சென்று விடுவதாகவும், மீதமுள்ள 48% நிதியில் பெரும் பகுதி மானியங்களுக்கே சென்று விடுவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.52,781 கோடியாக இருந்த நிலையில், நலத்திட்ட உதவிகளைக் கூட தமிழக அரசு கடன் வாங்கித் தான் செய்திருக்கிறது என்பதும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி இல்லாத நிலையில் தான் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த ஆவணம் மூலம் உறுதியாகியுள்ளது. அதற்கு முன் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021-22ஆம் ஆண்டில் நிதி நலக் குறியீட்டில் 15-ஆம் இடத்தையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் சராசரியாக 12-ஆம் இடத்தையும் தான் தமிழகம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்களாகும்.

    கடனைப் பொறுத்தவரை தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடனைத் தாக்குபிடிக்கும் திறனில் தமிழகம் வெறும் 11.1 புள்ளிகளுடன் 16-ஆம் இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம் கடுமையான நிதி அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. அடுத்த நில ஆண்டுகளில் பொது நிதியை மேலாண்மை செய்வதில் கடுமையான சவால்களை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் இவை உணர்த்துகின்றன.

    தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், அதை எதிர்கொள்ள வரி அல்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் கட்சிகள் அதை பொருட்படுத்தவில்லை என்பதையும், தமிழக பொருளாதாரத்தை தலைநிமிர்த்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழகத்தின் நிதி நிலை, கடன் சுமை ஆகியவற்றை இன்னும் மோசமாக்கி இருப்பதையுமே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

    2021-22ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த தி.மு.க., 2022-23ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.36,376 கோடியாக குறையும் என்று கூறியிருந்தது; ஆனால், அதற்கு மாறாக ரூ.52,781 கோடியாக அதிகரித்தது. 2023-24ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.26,313 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது நிதிநிலை அறிக்கை கணிப்புகளில் ரூ.37,540 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.44,906 கோடியாகவும் அதிகரித்தது. 2024-25ஆம் ஆண்டில் ரூ.18,583 கோடி மட்டுமே வருவாய்ப் பற்றாக்குறையாக இருக்கும் என கணிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், நிதி நிலை அறிக்கையில் அது ரூ.49,278 கோடியாக அதிகரித்திருக்கிறது.

    2025-26ஆம் ஆண்டில் தமிழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, ரூ.1218 கோடி வருவாய் உபரி இருக்கும் என்று 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், இப்போது வருவாய் உபரிக்கு வாய்ப்பில்லை என்றும், ரூ.18,098 கோடி வருவாய்ப் பற்றாக்குறை தான் ஏற்படும் என்றும் தி.மு.க. அரசு கூறியிருக்கிறது. உண்மை நிலை என்னவென்பது மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது தான் தெரியவரும். நிதிநிலையை மேம்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வால், ஒருமுறை கூற வருவாய்ப் பற்றாக்குறை இலக்குகளை எட்ட முடியவில்லை.

    மதுவணிகத்தின் மூலமான வருவாயை நம்பியும், பத்திரப் பதிவுக் கட்டணங்களை உயர்த்துவதை நம்பியும் நடத்தப்படும் தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. நடப்பாண்டில் அடைக்கப்பட வேண்டிய ரூ.49,638 கோடி கடனை அடைப்பதற்கு தேவையான நிதி தமிழக அரசிடம் இல்லாத நிலையில், அதற்கும் சேர்த்து நடப்பாண்டில் ரூ.1,55,584 கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் கடன் வாங்குவதற்கு கூட இயலாத நிலை உருவாகிவிடும்.

    எனவே, மக்களைப் பாதிக்காத வகையில் வரி அல்லாத வருவாயைப் பெருக்குதல், பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்குதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் நிதிநிலையை மேம்படுத்தவும், கடன் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
    • இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டம்.

    சென்னை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. சேப்பாக்கம் சமூக நல ஆணையரகம் அருகில் போடப்பட்ட சாமினா பந்தலில் உண்ணாவிரதம் இருந்தனர்.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யவும், 95 அரசாணையை ரத்து செய்தல், ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெஸி வரவேற்றார்.

    மாநில துணை தலைவர்கள் பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச் செல்வி, லதா, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
    • அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்னரே வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

    அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.

    இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கத்தை அவர்கள் இந்த ஆண்டும் கடைபிடித்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


    இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கடந்த ஆண்டு மாட்டு வண்டிகளை கிரி வீதியில் நிறுத்த அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக தனியார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ரூ.400 கட்டணத்துக்கு மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாகன வசதி இல்லாத காலத்தில் இருந்து எங்கள் முன்னோர்கள் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    மேலும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும், சிரமம் இன்றியும் மலைக்கோவிலுக்கு செல்லவும், பின்னர் அங்கிருந்து அடிவாரம் வந்தடையவும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 1 மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.

    தற்போது தைப்பூச திருவிழா நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (30-ந் தேதி) ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதை, யானைப்பாதை வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    ×