என் மலர்tooltip icon

    இந்தியா

    • கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
    • இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்து கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சி போல் கூரைவேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.

    இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கிடைக்கும் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒருமாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.

    • வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
    • நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.

    தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.

    இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய சட்டசபை ஒப்புதல் அளித்தது.
    • ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய அம்மாநில சட்டசபை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம். கோடை தொடங்குவதற்கு முன்பு தண்ணீரை சேமிப்பதாக உறுதிமொழி எடுக்க ஒரு பிரசாரம் செய்ய விரும்புகிறோம்.

    நாளை மாலை காவிரி ஆரத்தி எடுப்போம். இது ஒரு அரசு திட்டம். நாங்கள் அரசியலுக்காக அல்ல, வளர்ச்சிக்காக இருக்கிறோம்.

    ராமநகரம் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றப்படும். டெல்லியில் சில அமைச்சர்கள் குறும்பு செய்து வருகின்றனர். சட்டப்பூர்வமாக விஷயங்களை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என தெரிவித்தார்.

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    திருப்பதி:

    ரெயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு நேற்று முதல் 2 நாட்கள் நடைபெற இருந்தது.

    இந்த தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து சுமார் 50,000 இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 6000 பேருக்கு தமிழகத்திற்கு வெளியே வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ரெயில் மற்றும் பஸ்களில் பலர் மணி நேரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு சென்றனர்.

    ஆனால் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    அங்கிருந்து அதிகாரிகள் பலரும் தெலுங்கில் பேசினர். இதனால் தமிழக வாலிபர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

    இது குறித்து மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில்:-

    தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6000 பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வருவதற்காக நாங்கள் பஸ்களில் பல மணி நேரம் தூக்கத்தை இழந்து பயணம் செய்து இங்கு வந்தோம்.

    தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஒரு வழியாக ஆட்டோ மூலம் தேர்வு வந்தடைந்தோம். ஆனால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து விட்டனர்.

    தமிழகத்திலேயே இது போன்று ரத்து செய்யப்பட்டிருந்தால் நிம்மதியுடன் வீடு திரும்பி இருப்போம்.

    தற்போது நீண்ட தூரம் பயணம் செய்திருப்பதால் மீண்டும் வீடு திரும்பவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அவர்களுக்கு பண விரயமும் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற 6 ஆயிரம் பேரும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    பெங்களூரு:

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விசாரணையை டி.ஆர்.ஐ., சி.பி.ஐ., மாநில காவல் துறை ஆகியவை தீவிரப்படுத்தி உள்ளது.

    நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்ட அவரது கூட்டாளியான தருண்ராஜு கடந்த டி.ஆர்.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் விசாரிக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    டி.ஆர்.ஐ. சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் மது என். 2023 மற்றும் 2025-க்கு இடையில் ரன்யா தருணுடன் 26 முறை துபாய் பயணம் செய்தார். மார்ச் 3-ந்தேதி ரன்யாவுடன் தருண் துபாய் செல்வதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார். இருவரும் ஒன்றாக கிளம்பினர். பின்னர் தங்கத்தை வாங்கிக் கொண்டு திரும்பும்போது ரன்யாவிடம் கொடுத்து விட்டு தருண் ஹைதராபாத் சென்று விட்டார். தருண் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளவர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    இதையடுத்து தருண் ராஜூவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரை யோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.
    • கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.

    சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    இ.பி.எஸ் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சட்டம்-ஒழுங்கு பற்றி பேச அனுமதிக்கவில்லை.

    * எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்று நடந்த கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் பேச முற்பட்டேன்.

    * அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.

    * சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுப்பை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

    * மதுரை பெருங்குடி அருகே காவலர், கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஜான் காரில் சென்றபோது வழிமறித்து சினிமா பாணியில் கொலை, நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் தொழுகை முடித்துவிட்டு வந்தபோது கொலை, சென்னையில் தி.மு.க. நிர்வாகியை கடத்தி வெட்டிக்கொலை என நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    * கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.

    * தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    * முதலமைச்சருக்கு கீழுள்ள காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற அவலநிலை தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். விடுமுறை நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

    சென்னையில் எழிலகம் பின்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மாயவன் ஆகியோர் கூறியதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் போராட்டம் நடைபெறுவதால் அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை 1.4.2026 பதிலாக வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க வேண்டும்.

    இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் அல்லது மறியல் போராட்டம் என தீவிரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-

    * சட்டம் ஒழுங்கு பற்றி பேச அ.தி.மு.க.விற்கு தைரியம் இருக்கிறதா?

    * சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான், மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது.

    * கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    * தமிழக காவல்துறையின் கடும் நடவடிக்கை காரணமாக கொலை குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது.

    * மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * எண்ணிக்கையில் பார்கையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு 109 கொலைகள் குறைந்துள்ளன.

    * ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.

    * குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.

    * தொடர் குற்றம் புரிவோர், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றார். 

    • தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர்.
    • தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் முதல்வரின் மனித நேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்து இதுவரை 2ஆயிரத்து 700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அது 3 ஆயிரத்தை தாண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது.

    ஆனால் தற்போது சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்றார்.

    எதிர்பாராது நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    பா.ஜ.க.வினர் பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
    • நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

    நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    சுமார் 6 மாத விசாரணைக்குப் பிறகு கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் டெத் சர்டிபிகேட் அவரது பெற்றோரிடம் இன்று அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அவர்களுக்கு அசல் இறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டது. இன்று, நான் இங்கு வந்து அதை அவர்களிடம் ஒப்படைத்தேன். எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என தெரிவித்தனர்.

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.
    • சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.

    சென்னை:

    விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அதில்,

    சுனிதா வில்லியம்ஸின்

    பூமி திரும்பல்

    ஒரு பெண்ணின் வெற்றியோ

    நாட்டின் வெற்றியோ அல்ல;

    மகத்தான மானுடத்தின் வெற்றி

    அவர்

    மண்ணில் இறங்கும்வரை

    இரண்டு மடங்கு துடித்தது

    பூமியின் இருதயம்

    பெண்ணினத்துக்குக்

    கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்

    அந்த வேங்கை மகள்

    அவரது உயரம்

    நம்பிக்கையின் உயரம்

    அவரது எடை

    துணிச்சலின் நிறை

    மரணத்தின்

    உள்கூடுவரை சென்றுவிட்டு

    வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற

    சுனிதா வில்லியம்ஸை

    பூமியின் ஒவ்வொரு பொருளும்

    வரவேற்கின்றது

    இந்த விண்வெளிப் பிழை

    எதிர்கால அறிவியலைத்

    திருத்திக்கொள்ளும்

    ஆதாரமாக விளங்கும்

    பிழை என்பது அறியாமை;

    திருத்திக்கொள்வது அறிவு

    என்ற பாடத்தை

    அறைந்து சொல்லும்

    சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்

    வந்தவரை வாழ்த்துவோம்

    மானுடத்தை வணங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×