search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
    X
    அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

    அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நெல்லை மாவட்டம் அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் அம்பை காசிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    8-ந் திருநாளான வருகிற புதன்கிழமை அன்று அம்பை தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தக்குடம் எடுத்தும், ஆண்கள் அங்கபிரதட்சணமும், பெண்கள் கும்பிடு நமஸ்காரமும் செய்து அம்பை அகஸ்தியர் கோவில் வந்தடைகின்றனர். அங்கு சிறப்பு பூஜையும், அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன் பின்னர் இரவில் அகஸ்தியருக்கு சிவபெருமான், திருமண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசுவரன், ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, இந்து ஆலய பாதுகாப்பு மாநில செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் பல்வேறு சமுதாய நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அம்பை மற்றும் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலிலும் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    Next Story
    ×