search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முகாசி அனுமன்பள்ளி சின்னம்மன்-பெரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    முகாசி அனுமன்பள்ளி சின்னம்மன்-பெரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    முகாசி அனுமன்பள்ளி சின்னம்மன்-பெரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மொடக்குறிச்சி அருகே முகாசி அனுமன்பள்ளியில் சின்னம்மன்-பெரியம்மன் வேம்பராயசாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக ரூ.80 லட்சம் மதிப்பில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 3-ந் தேதி சிவாலய தரிசனத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் விநாயகர் வழிபாடும், மகா கணபதி ஹோமமும், தனபூஜையும், கோபூஜையும் நடைபெற்றது. 4-ந் தேதி காலை நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், மாலை கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது.

    நேற்று காலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து விநாயகர், சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×