என் மலர்
- ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா்.
- இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள கவர்னர் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டாா்.
இதை தொடர்ந்து ஆா்.வி.ஆா்லேகா் நாளை மறுநாள்(புதன்கிழமை) சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் ஆா்.என்.ரவி, தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.
இதையடுத்து தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் 12-ந்தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறாா். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.
- ஆகாஷ் உட்பட 5 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
- டிஜிபி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
மானாமதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில் உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி அழகர் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் ஆகாஷ் டெலிசன் (26) என்ற இளைஞர் உட்பட 5 பேர் மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து ஆகாஷ் 8ஆம் தேதி உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யும்போது தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. போலீசாரால் இளைஞர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அதனை மறைக்க இவ்வாறு கூறுவதாகவும் பெற்றோரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உரிய நீதி கிடைக்கும் வரை ஆகாஷின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அஜித்குமார் காவல் மரணவழக்குப்போல இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர் ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த முழு செயல்முறையையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தேர்வு.
- வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு.
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, பாமக வேட்பாளர் அன்புமணி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- 11-ந்தேதி வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
12-ந்தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
14 மற்றும் 15-ந்தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இதனிடையே 12 மற்றும் 13-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிப்பு.
- கச்சா எண்ணெய் விலை 2022-ம் ஆண்டுக்குப் பிறகு 110 அமெரிக்க டாலரை தாண்டி விற்பனை.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விளைகுடா நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
இதனால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சான்றாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 60 ரூபாய், வணிக சிலிண்டர் விலை ரூ. 115-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோதலால் இந்தியாவின் பொருளாதார ஸ்திரதன்மை நேரடியாக பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரை காணவில்லை. சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செய்தி வருகின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருகிறது என கார்கே தெரிவித்தார்.
இதற்கிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானாகவே, மத்திய கிழக்கு மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டார்.
- திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா?
மனு அளிக்க வந்த விவசாயிகளை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாயிலில் வைத்து கைது செய்வதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.
இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய விளைநிலங்களை அரசு திட்டத்திற்காக கையாகப்படுத்துவதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின்-ஐ சந்தித்து மனு கொடுக்க வந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாசலிலேயே வைத்து அவர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு முதல்வராக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பார்த்தால், மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா?
கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர், ஆட்சியில் இருக்கும் போது ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது திரு. ஸ்டாலினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் மனுவைப் பெறவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.
- ரவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம், கம்மம், காந்தி நகரை சேர்ந்தவர் ரவி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரசாந்தி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவி மது போதைக்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ரவி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் ரவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கணவர் விரைவில் இறந்து விடுவார் என கருதிய மனைவி கணவர் பெயரில் காப்பீடு செய்தார். காப்பீடு எடுத்து ஒரு ஆண்டு ஆகியும் ரவி இறக்கவில்லை. இதனால் காப்பீட்டு பணத்தை பெற கணவரை கொலை செய்ய பிரசாந்தி முடிவு செய்தார்.
அதன்படி ரவியின் உறவினரான சீனிவாஸ் அவரது நண்பர்களான ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை அணுகினார். அவர்களும் ரவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 2-ஆம் தேதி இரவு ரவியை அவரது ஆட்டோவில் கம்பம்-குரவி சாலையில் உள்ள எம்.பி. பாலம் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து ரவியை மது குடிக்க வைத்தனர். மது போதை தலைக்கு ஏறிய ரவி சாலையில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.
அப்போது ராஜ்குமார் தனக்கு சொந்தமான காரை வேகமாக ஓட்டி வந்து ரவி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ரவியின் பிணத்தை சாலை ஓரத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரவி சாலை விபத்தில் இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ரவியின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்தேகத்தில் பேரில் பிரசாந்தியை பிடித்து விசாரணை செய்த போது காப்பீட்டு பணத்திற்காக காரை ஏற்றி கொலை செய்ததாக தெரிவித்தார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரசாந்தி, ஸ்ரீனிவாஸ், ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை கைது செய்தனர்.
- 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது.
- தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் படம் மறுதணிக்கையாவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் வெளியாவது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை அடுத்து படக்குழு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு தடை விதித்ததோடு தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.
இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பார்க்க இருந்தனர்.
ஆனால் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பார்க்கவில்லை. இதை அடுத்து படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
- மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
- ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மங்கள் குமார், (வயது 22). இவர் காட்பாடி பகுதியில் சுற்றித் திரிந்து வந்தார். இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் செல்வதற்காக நின்று கொண்டிருந்தது.
அப்போது மங்கள் குமார் ரெயில் என்ஜின் மேற்கூரையில் திடீரென ஏறி அமர்ந்தார். என்ஜினில் மேல் உயர் அழுத்த மின்சார ஒயர்கள் சென்று கொண்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவரை கீழே இறங்குமாறு பலமுறை தெரிவித்தனர். அவர் இறங்க மறுத்தார். உடனே இது பற்றி ரெயில்வே மின்சார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, மங்கள் குமார் தன்னிச்சையாக பேசிக் கொண்டு, யாருடைய கட்டுப்பாடுகளையும் ஏற்காமல் சுற்றித் திரிவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தேதி பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், "லீடர்" திரைப்படம் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"லீடர்" திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 21-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
- எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள்.
- வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.
உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் சூர்ய குமார்யாதவ் கூறியதாவது:-
நாங்கள் கோப்பையை கைப்பற்றி விட்டோம் என்பதை உணர கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இது நீண்ட பயணமாக இருந்தது. 2024 இருபது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது.ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கினார்கள். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். நல்ல கிரிக்கெட் தொடர்புடைய பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
2024-க்குப் பிறகு எல்லாம் மாறியது. 2024-ல் நாங்கள் வேறு வகையான கிரிக்கெட்டை விளையாடினோம், அதில் இருந்து இந்த அணி எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.
கடந்த ஒரு மாதமாக அற்புதமான பயணமாக இருந்தது. இந்த பயணம் முழுவதும் ஒரு அணியாக நாங்கள் சாதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த சாதனையை படைத்து இருக்கிறோம்.
நான் ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். இறுதிப்போட்டியில் ரன்கள் எடுப்பது முக்கியத்துவம் பெற்றது.
எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.
2025-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், முற்றிலும் மாறுபட்ட வகையான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். தற்போது 2026-ல் சொந்த நாட்டு மக்கள் முன்பு சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதித்தோம்.
எனவே 2027, 2028, 2029 ஆண்டுகளிலும் அதை தொடர விரும்புகிறோம். எங்களை தடுக்க முடியாது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எங்களது அடுத்த இலக்காகும். அதே ஆண்டில் தான் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.







