என் மலர்tooltip icon
    • நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும்.

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா இன்று மாலை 5:30-க்கு சென்னை இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கல இசையுடன் துவங்கியது. தமிழ்நாடு சுற்றுலாதுறை மற்றும் இந்திய சுற்றுலாதுறை இணைந்து நடத்தும் இந்த நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள், கதகளி, ஒடிசி, குச்சிப்புடி, கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நடனங்கள் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதனை துவக்கி வைத்தனர்.


    சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலர் க.மணிவாசன், சுற்றுலாதுறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், இணை இயக்குநர் சிவப்பிரியா, மாவட்ட சப்-கலெக்டர், சுற்றுலா அலுவலர் சக்திவேல், நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், முன்னாள் தலைவர் விசுவநாதன், கவுன்சிலர் மோகன்குமார் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்த நாட்டிய விழா தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும். 

    • முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 121 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 

    • 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.

    'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். 

    2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.

    நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.

    அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.

    நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும். 

    நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

    ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.

    செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.

    இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ,  அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார்.
    • சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கியுள்ளார்.

    செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத்.

    சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.

    இந்நிலையில், சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர். மேலும் சென்னை அணியின் பெயரை VELS CHENNAI KINGS என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.

    2026 ஜனவரியில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    • கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் அடுத்த 48 மணி நேரங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். 

    • தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை
    • இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இதனிடையே மலைக்குச் செல்லும் பாதை இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து முஸ்லீம்கள் மட்டும் எவ்வாறு மலைமீது செல்ல அனுமதிக்கப்படலாம் என அக்கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்களை சந்திக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 

    "இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத சட்டவிரோத காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை. தமிழ்நாடு காவல்துறை சட்டவிரோதமானவர்கள் இல்லை என்றால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஏன் செயல்படுத்தவில்லை? தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை. நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.

    இந்த மக்களை ஏன் கைதுசெய்ய வேண்டும்? அவர்களுக்கு சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி என்றால், இந்துக்கள் காசி விஸ்வநாதரை சென்று வணங்குவதற்கு ஏன் தடை? இது என்ன ஔரங்கசீப் ஆட்சியா? மு.க. ஸ்டாலின் ஆட்சியா, முகமது ஸ்டாலின் ஆட்சியா? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? மு.க.ஸ்டாலின், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் அனைவரும் இந்து விரோதிகள்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட, ஹெச். ராஜா மற்றும் பாஜகவை சேர்ந்த மற்ற ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட மக்களை காண உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    • அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
    • ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.

    இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள 'அய்யோ காதலே' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    • மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.
    • தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.

    2025-ஆம் ஆண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மக்கள் தொகை வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.

    மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கவலைப்பட்ட உலக நாடுகள், இப்போது போதிய குழந்தைகள் பிறக்காதது குறித்து அச்சமடைந்துள்ளது.

    இதனால் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல சலுகைகளை அறிவித்தும் பெரிய பயன் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றன.

    உலகின் 60%-க்கும் அதிகமான நாடுகளில் பிறப்பு விகிதமானது, மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.

    ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக கருத்தரிப்பு விகிதம் 2.4-ஐத் தாண்டவில்லை.

    1950-களில் 4.7-ஆக இருந்த உலக சராசரி, இப்போது பாதியாகக் குறைந்துள்ளது.

    2025இல், உலக கருத்தரிப்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 0.37% குறைந்து 2.40 ஆக உள்ளது. ஐ.நா. மக்கள்தொகை அறிக்கை இதை அசாதாரண குறைவு என்று விவரிக்கிறது.

    இந்தக் குறைவு, 2050-க்குள் உலக மக்கள்தொகையை 2.1-க்கு கொண்டுவரும் என்று ஐ.நா. கணிக்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் 2.1 ஐ கீழ் உள்ளன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2.0 ஆக, நகர்ப்புறங்களில் 1.7 ஆகக் குறைந்துள்ளது.

    சிக்கலில் சீனா: 

    சீனாவின் நிலைமை 2025-இல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து சுருங்கி வருகிறது. சீனாவின் கருத்தரிப்பு விகிதம் 2025-ல் 1.01-ஆக உள்ளது.

    அண்மைக் காலம் வரை உலக மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்த சீனாவை இந்தியா கடந்த 2023 முந்தியது.

    தற்போது உலகின் மக்கள் தொகையில் 145 கோடி மக்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    இதற்கு சீனா ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மட்டுமே என சட்டம் போட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதே காரணம்.

    கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக்கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஆனால் அதுவே இப்போது அந்நாட்டுக்கு வினையாக வந்து முடிந்துள்ளது.

    2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது. 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.

    இருப்பினும் பல சீனர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்போது அந்த ஒரு குழந்தை கூட வேண்டாம் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டனர்.

    இதனால் சீனா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் கொள்கைகளை வகுத்து அமல்படுத்தி வருகிறது.

    அதன் படி சீனாவில் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரிச்லுகைகள் மற்றும் நேரடிப் பண உதவி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது.

    இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து பிறப்பு தொடர்பான மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.

    ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 13 சதவீத VAT வரி விதிக்கப்படும் என்றும் அண்மையில் சீனா அறிவித்தது.

    இவ்வளவு செய்தும், சீன இளைஞர்கள் அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பளு காரணமாகத் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றைத் தவிர்த்து வருகின்றனர்.

    அடுத்ததாக ரஷியா..

    உக்ரைன் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால், ரஷியாவின் பிறப்பு விகிதம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

    அதிபர் புதின் 'பெரிய குடும்பங்களே ரஷியாவின் எதிர்காலம்' என்று கூறி வருகிறார். சோவியத் காலத்து விருதான 'மதர் ஹீரோயின்' விருதை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு பெரும் தொகையும் கௌரவமும் வழங்கப்படுகிறது. தம்பதிகள் வீட்டில் ஒன்றாக இருப்பதற்கென்றே சிறப்பு விடுமுறைகளையும் ரஷிய நிறுவனங்கள் அறிவித்தன.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி பெண்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது. இது பின்னர் பள்ளியில் பயிலும் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

    மேலும், கருக்கலைப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தை வேண்டாம் என்ற கருத்தைப் பரப்புவதற்குத் தடை விதிக்க மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஜப்பான்:

    குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் தனி அமைச்சகமே வைத்துள்ளது. அங்கு, 'குழந்தை மற்றும் குடும்ப முகமை' அமைச்சகத்தின் மூலம் டேட்டிங் செயலிகளை அரசாங்கமே நடத்தி இளைஞர்களைத் திருமணத்திற்கு ஊக்குவித்து வருகிறது.

    அதிக வேலை நேரம், வேலைப்பளு காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் தாம்பத்தியத்தின் மீதான ஆர்வத்தை இழந்து வருகின்றனர். தேவைப்பட்டால் வாடகை கணவன் என்ற அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி விட்டது. 

    தென் கொரியா:

    தற்போதைய நிலவரப்படி, 0.7-க்கும் கீழ் என்ற அளவில் உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது.

    2025-இல், ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி அளிக்கும் திட்டங்களை அந்நாடு அறிவித்துள்ளது.

    ஆனால் ஏன்?

    வீடு வாங்குவது மற்றும் குழந்தைகளை வளர்ப்பது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாக மாறியது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதால், திருமண வயது தள்ளிப் போவது, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பாலியல் உறவில் ஆர்வமின்மை, கருவுறுதல் பிரச்சனை ஆகியவை இந்த உலகளாவிய பிறப்பு சதேவீத வீழ்ச்சிக்கு காரணங்களாக சுட்டப்படுகின்றன.

    சுதந்திரமான வாழ்க்கை முறையை விரும்பும் இந்த தலைமுறையினரிடையே 'இருவருக்கும் வருமானம் - குழந்தை வேண்டாம்' என்ற கலாச்சாரம் உலகெங்கும் பரவி வருகிறது.

    2025-ஆம் ஆண்டு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ரஷியா, சீனா, தென் கொரியாவை போல் பணத்தை அள்ளிக் கொடுத்தால் மட்டும் பிறப்பு விகிதத்தை உயர்த்திவிட முடியாது என்பதாகும்.

    வேலை-வாழ்க்கைச் சமநிலை, பாலின சமத்துவம் மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கினால் மட்டுமே இந்த மக்கள் தொகைச் சரிவை உலக நாடுகள் தடுக்க முடியும்.

    சரி இந்தியாவுக்கு வருவோம்!

    இதற்கிடையே இந்திய அளவில் ஒரு புள்ளிவிரமமும் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

    அதாவது, இந்தியாவில் 49 மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    2021 குடிமைப் பதிவுத் தரவுகளின்படி இந்த உண்மை இந்த ஆண்டு தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்த பிறப்பு விகித குறைவு, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

    2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கிறது.

    குறிப்பாக இந்த 49 மாவட்டங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.

    2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன, அப்படிப் பார்த்தால், இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.

    இதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்களிலும், பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகளை வரையறுக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    ஆனால் இதனால் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என தென் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  

    ×