என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அதிரடியை நிறுத்த மாட்டோம்... எங்களோட அடுத்த இலக்கு அந்த தொடர்தான்... சூர்யகுமார்
    X

    அதிரடியை நிறுத்த மாட்டோம்... எங்களோட அடுத்த இலக்கு அந்த தொடர்தான்... சூர்யகுமார்

    • எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள்.
    • வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.

    உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் சூர்ய குமார்யாதவ் கூறியதாவது:-

    நாங்கள் கோப்பையை கைப்பற்றி விட்டோம் என்பதை உணர கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    இது நீண்ட பயணமாக இருந்தது. 2024 இருபது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது.ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கினார்கள். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். நல்ல கிரிக்கெட் தொடர்புடைய பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.

    2024-க்குப் பிறகு எல்லாம் மாறியது. 2024-ல் நாங்கள் வேறு வகையான கிரிக்கெட்டை விளையாடினோம், அதில் இருந்து இந்த அணி எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.

    கடந்த ஒரு மாதமாக அற்புதமான பயணமாக இருந்தது. இந்த பயணம் முழுவதும் ஒரு அணியாக நாங்கள் சாதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த சாதனையை படைத்து இருக்கிறோம்.

    நான் ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். இறுதிப்போட்டியில் ரன்கள் எடுப்பது முக்கியத்துவம் பெற்றது.

    எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.

    2025-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், முற்றிலும் மாறுபட்ட வகையான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். தற்போது 2026-ல் சொந்த நாட்டு மக்கள் முன்பு சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதித்தோம்.

    எனவே 2027, 2028, 2029 ஆண்டுகளிலும் அதை தொடர விரும்புகிறோம். எங்களை தடுக்க முடியாது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எங்களது அடுத்த இலக்காகும். அதே ஆண்டில் தான் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    Next Story
    ×