தொழில்நுட்பம்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ஆர்.பி.ஐ செயலி அறிமுகம்
ரிசர்வ் வங்கியின் சேவைகளை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த வழி செய்யும் புதிய செயலியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கியின் சேவைகளை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த வழி செய்யும் புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும் படி இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலியை வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
ரிசர்வ் வங்கியின் இணையத்தளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளை வாடிக்கையாளர்கள் புதிய செயலியை கொண்டு ஸ்மார்ட்போனிலேயே மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொது விழிப்புணர்வு தகவல்கள், புதிய ரூபாய் நோட்டுக்களின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்த எளிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியில் பொது மக்களுக்கு வழங்கப்படும் தகவல்களை முழுமையாக படிக்க முடியும். இதோடு புஷ் எனும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் செயலியில் பெற முடியும்.