தொழில்நுட்பம்
குறைந்த விலையில் பிஎஸ்என்எல் வரம்பற்ற வாய்ஸ்கால்ஸ் சேவை அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் படி வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:
ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் இலவச சேவைகளை போன்றே பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. பல காலமாக இருந்து வரும் டெலிகாம் சேவைகளின் விலையில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையினை அறிமுகம் செய்தது.
மற்ற நிறுவனங்கள் எத்தகைய சேவைகளை வழங்கியும் ஜியோ சலுகைகளை நெருங்க முடியவில்லை. வாழ்நாள் முழுக்க வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால்களை ஜியோ வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மற்ற நிறுவனங்களும் இதே போன்ற சலுகைகளை வழங்க துவங்கியுள்ளன.
அதன் படி ஜியோவுடனான போட்டியில், இம்முறை பிஎஸ்என்எல் களமிறங்கி புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சேவையின் கீழ் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கும் இந்த சேவையின் வேலிடிட்டி ஆறு மாதங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 300 எம்பி அளவு டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.144/- செலுத்த வேண்டும்.
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா மற்றும் நாள் ஒன்றிற்கு 1GB அளவு டேட்டா மறறும் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்டவற்றை மார்ச் 31, ஆம் தேதி வரை இலவசமாக வழங்கி வருகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு மாற விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் புதிய சலுகை பயனுள்ளதாக இருக்கும்.