உலகம்
இலங்கை ஊரடங்கு

இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்

Published On 2022-05-16 09:26 GMT   |   Update On 2022-05-16 09:26 GMT
மக்கள் புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொழும்பு:

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. 

இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையில் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகி ரனில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனாலும் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து மேலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் புத்த பூர்ணிமாவை தொடர்ந்து இன்று ஊரடங்கு விலக்கிகொள்ளப்பட்டது. இருப்பினும் மக்கள் விழாவில் பங்கேற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு வந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கி வருகின்றனர். இதனால் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News