உலகம்
கோப்புப்படம்

கோத்தபய எடுத்த முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்: நிபுணர்கள் கருத்து

Published On 2022-04-01 09:34 GMT   |   Update On 2022-04-01 09:34 GMT
2.2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த சில முக்கிய முடிவு களே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை திடீரென்று ஏற்பட்டு விடவில்லை. 2019-ம் ஆண்டில் இருந்தே ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கை பொருளாதாரம் சரிவை நோக்கி செல்ல தொடங்கியது.

கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பொது முடக்கம், பொருளாதார வீழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தி விட்டது. 2019-ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த சில முக்கிய முடிவுகளே தற்போ தைய நிலைக்கு காரணம்.

நாட்டின் வரி விதிப்பு முறையில் கோத்தபய ராஜபக்சே மாற்றம் செய்தார். 15 சதவீத வரியை 8 சதவீதமாக குறைத்தார். இதனால் அரசின் வரி வருவாய் குறைய தொடங்கியது. அரசு துறையில் ஒரு லட்சம் புதிய வேலைகளை உருவாக்கினார். இதனால் அரசின் செலவினம் அதிகரித்தது.

போதிய ஆய்வு செய்யாமல் இயற்கை விவசாயத்தை அரசு நடமுறைப்படுத் தியது. இதனால் தேயிலை, மிளகு, காய்கறி உற்பத்தியில் 30 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

அதேவேளையில் இலங்கையில் அதிகளவில் வருவாய் அளிக்கும் சுற்றுலா துறையும் கொரோனா பெரும் தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்தது. விவசாய விளை பொருள், ஆயத்த ஆடை ஏற்றுமதியும் சரிவை சந்தித்தது. நாட்டின் நிதிப்பற்றாக்குறை 2020-ம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்தது. அது 15 சதவீதமாக அதிகரித்தது.

மேலும் ஹம்ன் தோட்டா துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களில் அளவுக்கு மீறி இலங்கை அரசு முதலீடு செய்தது. இந்த முதலீடுகளுக்கு சீனாவின் கடன் உதவியை இலங்கை சார்ந்திருந்தது.

சீனாவுக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடனை கொடுக்க முடியாததால் பல அரசு சொத்துக்கள் சீனாவிடம் குத்தகைக்கு சென்றது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கருத்தில் கொள்ளாமல் இலங்கை அரசு அதிக அளவில் கரன்சி நோட்டுகளை அச்சிட்டது.

2 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி இலங்கை ரூபாய் அச்சிடப்பட்டது. செயற்கையாக கரன்சியை பெருக்கியதன் விளைவாக பண வீக்கம் அதிகரித்தது. இதனால் உச்சக்கட்ட விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News