செய்திகள்
கவிஞர் கவிபாஸ்கர் முதல்வரிடம் நிதி வழங்கினார்

தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூ. 6 லட்சம் நிவாரணம்

Published On 2021-06-16 14:02 GMT   |   Update On 2021-06-16 14:02 GMT
லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம் வழங்கியதை, ஸ்டாலினிடம் கவிஞர் கவிபாஸ்கர் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு” ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதியகத்திற்கு நிதி வழங்கி வருகின்றனர்.

இதனையறிந்து, கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு 2009 ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையிலிருந்து தப்பித்து லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்கள் தமது சிறுசேமிப்புத் தொகையான ரூ. 6,00,000/- (ஆறு இலட்சம்) ரூபாயை தமிழக முதல்வரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்சிறுவர்கள் தங்களது சிறுசேமிப்புத்தொகையை சேகரித்து லண்டன் செங்கோல் படைப்பாக நிறுவனர் “தலைவனின் தம்பி” பொன். சுதன் ஒருங்கிணைப்பில் லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ச் சிறுவர்கள் சார்பில் ரூபாய் ஆறுலட்சத்தை (ரூ.6,00,000/-) திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

அதோடு மட்டுமின்றி சித்தன் ஜெயமூர்த்தி இசையில் பாடல் ஒன்றை உருவாக்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை திரட்டி தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News