செய்திகள்
விண்கலத்தை அனுப்பி நிலாவில் இருந்து கற்களை கொண்டு வர சீனா திட்டம்
ஆளில்லா விண்கலத்தை நிலாவுக்கு அனுப்பி, கற்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
நிலவில் 1969-ம் ஆண்டு முதன் முதலில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து பாறைகள், மணல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். அதன் பிறகு 1976-ம் ஆண்டு ரஷியா ‘லூனா 24’ என்ற ஆள் இல்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அங்குள்ள பாறைகளை ஆய்வு செய்தவற்காக இந்த விண்கலம் 170 கிராம் கற்களை அங்கிருந்து கொண்டு வந்தது.
இந்த கற்களை ஆய்வு செய்து நிலவின் நிலப்பரப்பின் தன்மை, தோற்றம் ஆகியவற்றை அறிய திட்டமிடப்பட்டது. அந்த கற்களை ஆய்வு செய்து பல தகவல் அறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்போது 3-வது நாடாக சீனா ஆள் இல்லாத விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிலவில் இருந்து கற்களை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய இருக்கிறது.
‘சேஞ்ச்-5’ என்ற பெயர் கொண்ட இந்த விண்கலம் பெரிய ராக்கெட் மூலம் நிலவுக்கு ஏவப்படுகிறது. இந்த விண்கலம் மூலம் இது வரை யாரும் கால் பதிக்காத “ஓடிஷன் ஆப் ஸ்டார்ஸ்” என்ற பகுதியில் இருந்து 2 கிலோ பாறை கற்களை பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கற்களை ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் எரிமலைகள் இயக்கம், சூரியனில் வீசும் கதிவீச்சில் இருந்து காக்கும் காந்த அலை எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பதை அறிய முடியும்.
இந்த ஆய்வை சீனா செய்ய உள்ளது. சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா, ரஷியாவுக்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்யும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.