செய்திகள்
அரிசோனா, ஜார்ஜியா மாநிலங்களையும் கைப்பற்றிய ஜோ பைடன் -ஆதரவு வாக்குகள் 306 ஆக உயர்வு
அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களையும் கைப்பற்றி கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், நேற்று அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களையும் வென்று உள்ளார். இதன்மூலம், அமெரிக்க தேர்தலின் இறுதி தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கையை பொருத்தவரை ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 306 ஆக உயர்ந்துள்ளது. வட கரோலினாவை வென்ற டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சிக்கான தேர்தல் சபை வாக்குகள் 232 ஆக உயர்ந்துள்ளது.
இந்த முடிவுகளை நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் பிற நெட்வொர்க்குகள் அறிவித்துள்ளன, இரண்டு இறுதி மாநிலங்களும் தேர்தல் தினத்திற்கு ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு தேர்தல் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ஜார்ஜியாவில் பைடனின் வெற்றி அவரது வாக்கு எண்ணிக்கையில் 16-ஐ கூடுதலாக சேர்த்தது, 2016 தேர்தல்களில் டொனால்ட் டிரம்ப் 306 தேர்தல் வாக்குகளைப் பெற்றபோது, அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 232 வாக்குகளை வென்று இருந்தார்.
2016 இல் டிரம்ப் வென்ற ஜார்ஜியா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஐந்து மாநிலங்கள் இந்த ஆண்டு பைடனை நோக்கி திரும்பி உள்ளன.
சி.என்.என் அறிக்கையின்படி, நீண்ட இடைவெளிக்குபிறகு ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவார். கடைசியாக 1992 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வெற்றி பெற்று இருந்தார்.