அமேசான் ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சான்பிரான்சிஸ்கோ:
உலகின் முன்னணி வணிக நிறுவனமான அமேசான் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 10 லட்சத்து 37 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தியதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் கொரோனா பாதித்த ஊழியர்களின் விவரங்களை நிறுவனம் பகிர்ந்து கொள்ள தயங்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 19 ஆயிரத்து 816 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாங்கள் எதிர்பார்த்ததை விட தொற்று விகிதம் குறைவாகவே உள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 816 ஊழியர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 650 தளங்களில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்கள் என்ற வீதத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. எங்களைப் போன்ற மற்ற பெரிய நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அதன் எண்ணிக்கையை வெளியிட வேண்டும். இது நமக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.