செய்திகள்
பாரிஸ் நகரம்

பாரிஸ் நகரை பதற்றத்தில் உறைய வைத்த சத்தம்- காரணம் இதுதான்

Published On 2020-09-30 11:03 GMT   |   Update On 2020-09-30 11:07 GMT
பாரிஸ் நகரில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், நகரில் எங்காவது தாக்குதல் நடத்திருக்கலாம் என்ற பதற்றம் உருவானது.
பாரிஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று திடீரென சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததுபோன்ற சத்தம் கேட்டது. பல்வேறு வீடுகளில் உள்ள ஜன்னல்கள் அதிர்ந்தன, பறவைகள் நாலாபுறமும் சிதறி பறந்தன. இதனால் நகரில் எங்காவது தாக்குதல் நடத்திருக்கலாம் என்ற பதற்றம் உருவானது. இதுபற்றி சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதுபற்றி விசாரித்த காவல்துறை, நடந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 

அதில், பாரிஸ் மற்றும் புறநகர்ப்பகுதியில் இன்று போர் விமானம் ஒலியை விட அதிவேகத்தில் சீறிப் பாய்ந்ததாகவும், அதனால் குண்டுவெடித்தது போன்ற சத்தம் கேட்டதாகவும் கூறி உள்ளது. 

பாரிஸ் நகரின் மீது திரென போர் விமானம் பறக்க என்ன காரணம்? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. போர் விமானம் பறந்ததை ராணுவ அமைச்சகமும் உறுதி செய்தது. ஆனால், மேற்கொண்டு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.  

மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், அவசர சேவை எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சார்லி ஹெப்டோ பத்திரிகையின் முன்னாள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து பாரிசில் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News