செய்திகள்
அமெரிக்கா: இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
அமெரிக்காவில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ரோஷ்டர் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் நேற்று இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் விதிகளை மீறி நடந்த அந்த கேளிக்கை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அந்த நிகழ்சியில் பங்கேற்றவரில் ஒருவர் தான் மறைத்து கொண்டுவந்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும், அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,14 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை கைது செய்யும் நடவடிக்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.