செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்காவில் இந்திய வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி

Published On 2020-08-09 07:11 GMT   |   Update On 2020-08-09 07:11 GMT
அமெரிக்காவில் ஆற்றில் தத்தளித்துக் கொண்டு இருந்த சிறுவர்களை காப்பாற்ற முயன்ற இந்திய வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஷ்னோ நகரில் வசித்து வந்தவர் மன்ஜித் சிங். இந்தியர். இவர் கடந்த புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கிங்ஸ் ஆற்றுக்கு தனது உறவுக்காரர் மற்றும் நண்பர்கள் உடன் சென்றார்.

அப்போது 2 சிறுமிகளும், ஒரு சிறுவனும் ஆற்றில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை மன்ஜித் சிங் பார்த்தார். உடனடியாக அவர்கள் 3 பேரையும் காப்பாற்ற அவர் முயற்சித்தார். தனது தலையில் அணிந்திருந்த டர்பனை கழற்றி கயிறாக பயன்படுத்தி சிறுவர்களை மீட்க முயற்சித்தார். ஆனால் அது பலன் அளிக்காததால் சிறுவர்களை காப்பாற்ற மன்ஜித் சிங் ஆற்றுக்குள் குதித்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக நீரின் வேகம் காரணமாக மன்ஜித் சிங் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினார். அதனைத் தொடர்ந்து இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வருவதற்குள் 2 சிறுமிகளையும், ஒரு சிறுவனையும் அங்கிருந்தவர்கள் போராடி மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி மன்ஜித் சிங்கை தேடினர். சுமார் 40 நிமிடம் தேடுதல் வேட்டைக்கு பின்னர் நீருக்கு அடியில் இருந்து மன்ஜித் சிங் பிணமாக மீட்கப்பட்டார்.

இதனிடையே ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒரு சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News