செய்திகள்
விபத்து நடந்த பகுதி

பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு - நட்புநாடுகள் உதவுமாறு அழைப்பு விடுத்த லெபனான் பிரதமர்

Published On 2020-08-04 20:03 GMT   |   Update On 2020-08-04 20:03 GMT
பெய்ரூட்டில் ஏற்பட்டுள்ள வெடிவிபத்து தொடர்பாக நட்புநாடுகள் எங்களுக்கு உதவவேண்டும் என லெபனான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெய்ரூட்:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

துறைமுகப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த வெடிபொருள் சோடியம் நைட்ரேட் எனவும்
தெரியவந்துள்ளது.

வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக துறைமுகப்பகுதி மாறியது. இது நைட்ரஜன் டை ஆக்சைடு நச்சு வாயுவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த வெடிவிபத்து பெய்ரூட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுகளில் உணரப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2 ஆயிரத்து 750-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பெய்ரூட் கவர்னர் மர்வான் அபோண்ட் கண்ணீருடன் ‘பெய்ரூட் பேரழிவு நகரம்’ என தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து பேசிய லெபனான் பிரதமர் ஹசன் டிஅப், நட்பு நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் லெபனானுக்கு உதவ முன்வந்துள்ளது.

இதற்கிடையில், இந்த வெடிவிபத்தில் தற்போதைய தகவலின் படி இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இந்தியதூதரகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News