செய்திகள்
கோர்ட்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கின் குற்றவாளி கோர்ட் அறையில் சுட்டுக்கொலை

Published On 2020-07-30 05:00 GMT   |   Update On 2020-07-30 05:00 GMT
பாகிஸ்தானில் மதநிந்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர், நீதிமன்றத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்ததாக தாகிர் நசீம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இஸ்லாமின் கடைசி தீர்க்கதரிசி எனக் கூறியதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான மத நிந்தனை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு கடும் எதிர்ப்புகள் இருந்ததால், விசாரணையின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், பெஷாவர் நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தாகீர் நசீம் ஆஜர்டுத்தப்பட்டார். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஒரு நபர், திடீரென எழுந்து தனது துப்பாக்கியால் தாகிர் நசீமை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் தாகீர் நசீம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். நீதிபதி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் நீதிபதி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற அறைக்குள் எப்படி துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடைபெறுகிறது.

நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டவர் அமெரிக்க குடிமகன் என்பதால், அவரின் குடும்பத்திற்கு அமெரிக்க வெறியுறவுத்துறை இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், அவரை சுட்டுக்கொன்ற குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற மோசமான சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு சட்டத்தில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News