செய்திகள்
வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும் - டிரம்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம்
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும் என டிரம்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளன.
உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் இலையுதிர் காலத்து அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்தப்போவதாக அண்மையில் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி பாடம் நடத்தினால் அவற்றில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த புதிய உத்தரவால் அமெரிக்காவில் பயிலும் இந்தியர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனநாயகக் கட்சியின் 136 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 30 செனட்டர்களும் டிரம்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் “அமெரிக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்கும் மற்றும் ஆன்லைன் பாட திட்டத்தின் கீழ் பயிலும் சர்வதேச மாணவர்களை கட்டாயப்படுத்தவோ அல்லது நாடு கொடுத்தவோ தாங்கள் அறிவித்திருக்கும் திட்டம் கொடூரமானது, ஒத்துப் போகாதது. எனவே சர்வதேச மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளனர்.