செய்திகள்
உக்ரைன்: ஊரடங்கை மீறி நதியில் உல்லாச குளியல்- காத்திருந்து வாலிபரை மடக்கிய போலீசார்
கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பயந்து இருக்கும் நிலையில், உக்ரைனில் வாலிபர் ஒருவர் நதியில் உல்லாச குளியல் போட்டதால் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பூங்கா, கடற்கரை பகுதிகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றிற்கு செல்லக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வாலிபர் ஒருவர் நீப்பர் நதியில் உல்லாசகமாக நீந்தி குளிக்கத் தொடங்கினார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரை கரைக்கு வரும்படி எச்சரித்தனர். அவர் சுமார் அரைமணி நேரம் உல்லாச குளியல் போட்ட பின் கரைக்கு திரும்பினர்.
கரைக்கு திரும்பிய அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் இந்த வழக்கை 15-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. உக்ரைனில் இதுவரை 1462 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.