செய்திகள்
விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30வரை நீட்டிப்பு - இலங்கை அரசு அனுமதி
விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொழும்பு:
இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பரிசீலிக்க இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிர்ணயித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை சென்று வருகின்றனர்.
இந்நிலையில், விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டு இணை மந்திரிசபை செய்தி தொடர்பாளர் ரமேஷ் பதிரனா கூறியதாவது:
ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு, விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டத்தின் மூலம் 10 முதல் 12 சதவீதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதையடுத்து. விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டத்தை மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.