செய்திகள்
துருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் பலி
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நேற்று துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் உயிரிழந்தனர்.
அங்காரா:
சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர்.
மேலும், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.
சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.
உள்நாட்டில் தொடங்கிய இப்போர் தற்போது இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ள துருக்கி-சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரம் இட்லிப் பகுதியில் சிரிய ராணுவம் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ராணுவம் சிரிய படைகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில் இட்லிப் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் துருக்கியின் நட்பு நாடான அமெரிக்காவும் இட்லிப் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்கா ஆதரவுடன் துருக்கி படைகளும் ரஷியா ஆதரவுடன் சிரிய படைகளும் நடத்திவரும் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.