செய்திகள்
தாக்குதலுக்குள்ளான அரசு அலுவலகம்

மெக்சிகோ: ஆயுதமேந்திய கும்பலுடன் போலீசார் துப்பாக்கிச் சண்டை - 14 பேர் பலி

Published On 2019-12-01 08:44 GMT   |   Update On 2019-12-01 08:44 GMT
மெக்சிகோ நாட்டின் கோஹுய்லா மாநிலத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் சூறையாடுவதற்கு வந்த ஆயுதமேந்திய கும்பலுடன் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:

ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர்.

இதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங்குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சமீபகாலமாக மர்மப் பிணங்கள் வரிசையாக கண்டெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள மெக்சிகோவின் கோஹுய்லா மாநிலத்திற்குட்பட்ட வில்லா யூனியன் குடியிருப்பு பகுதியில் கொள்ளையடித்து, சூறையாடுவதற்காக நேற்றிரவு வந்த ஆயுதமேந்திய கும்பல் அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது. சில வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.



தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் சுமார் ஒருமணி நேரம் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 போலீஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News