செய்திகள்
கோப்பு படம்

பர்கினோ பசோ: காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2019-11-21 12:23 GMT   |   Update On 2019-11-21 12:23 GMT
பர்கினோ பசோ நாட்டில் காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒவ்கடங்கு:

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் சோம் மாகாணத்தின் அர்பிண்டா பகுதியில் உள்ள காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத போலீசார் பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர்.

இந்த மோதலில் 18 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்கள் தரப்பில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், பைக்குகள், ஜிபிஎஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Tags:    

Similar News