செய்திகள்
பிலிப்பைன்சில் பயங்கரவாத தாக்குதல்

பிலிப்பைன்சில் 23 பேரை பலி கொண்ட தேவாலய தாக்குதலை நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்

Published On 2019-09-07 23:25 GMT   |   Update On 2019-09-07 23:25 GMT
பிலிப்பைன்சில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் என்று மரபணு பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ஜகார்த்தா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வழிபாடு நடந்து கொண்டிருந்தது.

அப்போது பலத்த சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் அதிர்ந்துபோய் நாலாபக்கமும் ஓட்டம் எடுத்தனர். எனினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 23 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 102 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் என்று மரபணு பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதை இந்தோனேசிய போலீசார் உறுதி செய்தனர்.

தாக்குதல் நடத்திய தம்பதியர், ரூல்லி ரியான் ஜேக்கே, அவரது மனைவி உல்பா ஹண்டயானி சலே ஆவார்கள்.

இவர்கள், ஜமா அன்ஷரட் தவுலா என்ற உள்நாட்டு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கி இருந்ததும், 2017-ம் ஆண்டு அவர்கள் துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இவர்கள் சட்டத்துக்கு விரோதமான வகையில்தான் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

இவர்கள் தாக்குதல் நடத்தியதின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. 
Tags:    

Similar News