செய்திகள்
அமேசான் காட்டுத்தீ: விமானங்கள் பறக்க தடைவிதித்தது பொலிவியா
அமேசானில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக அப்பகுதி வழியாக பயணிகள் விமானங்கள் பறக்க பொலிவியா தடைவிதித்துள்ளது.
சூக்ரே:
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் மத்திய தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா உள்பட பல நாடுகளை சுற்றியுள்ளது. பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உள்பட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.
இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக அமேசான் காடுகளில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், உலக நாடுகள் அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க உதவி செய்யவேண்டுமென பிரேசில் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காட்டுத்தீ பொலிவியா நாட்டை சுற்றியுள்ள அமேசான் காடுகளிலும் பரவி வருவதால் 7 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளது.
இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக அமேசான் காடுகள் வழியாக பயணிகள் விமானங்கள் செல்ல தடை விதிப்பதாக பொலிவியா விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.