செய்திகள்
ஜப்பானில் புயல் எச்சரிக்கை: விமான சேவை ரத்து
ஜப்பான் நாட்டில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 200-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கார்ஷோ என்ற புயல் உருவாகியுள்ளது. அப்புயல் நாளை கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 144 கி.மீ வேகத்தில் கனமழையுடன் கூடிய பயங்கர காற்று வீசும் என தெரிவித்தது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டோக்கியோ, நகோயா மற்றும் ஒசாகா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக 222 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.