செய்திகள்
மலாலா

காஷ்மீர் நிலவரம் குறித்த மலாலாவின் உருக்கமான பதிவு

Published On 2019-08-08 07:12 GMT   |   Update On 2019-08-08 07:12 GMT
காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இது குறித்து மாநிலங்களவையில் விவாதம் தொடந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் மக்கள் நான், என் பெற்றோர், குழந்தையாக இருந்தபோது மற்றும் என் தாத்தா, பாட்டி ஆகியோரின் இளம் வயது முதலே போராட்டத்தில்தான் இருக்கிறார்கள். 70 ஆண்டுகளாக காஷ்மீர் குழந்தைகள் வன்முறைக்கு மத்தியில்தான் வாழ்கிறார்கள்.

தெற்கு ஆசியாவே என் குடும்பம். அதில் 1.8 பில்லியன் காஷ்மீர் மக்களும் இருக்கிறார்கள். நாம் வெவ்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகளுடன் வாழ்கிறோம். நாம் அனைவரும் அமைதியாகத்தான் வாழ்கிறோம் என நம்புகிறேன்.

ஒவ்வொருவரும் போராட்டத்திலும், மற்றவர்களை காயப்படுத்துவதும் என இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காஷ்மீர் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து யோசிக்கும்போதுதான் மிகுந்த வருத்தமாக உள்ளது.



தெற்கு ஆசியாவில் இருக்கும் சர்வதேச சமூக அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களது பாதிப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.

எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனித உரிமைகளுக்காக போராடுவது மற்றும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை அவசியமான ஒன்று. 70 ஆண்டுகால போராட்டத்தை அமைதியான முறையில் சுமூக தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







Tags:    

Similar News