செய்திகள்
ஊழல் வழக்கில் கைதான மாலத்தீவு முன்னாள் அதிபரை விடுதலை செய்து ஐகோர்ட் உத்தரவு
ஊழல் வழக்கில் கைதாகி வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenreleased
மாலே:
மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது.
அப்துல்லா யாமீன் வெளியே இருந்தால் இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வாதாடிய அரசுதரப்பு வழக்கறிஞரின் கோரிக்கைக்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார்.
அப்துல்லா யாமீன் 18-2-2019 அன்று கைது செய்யப்பட்டு, தலைநகர் மாலேவில் அருகேயுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையை கருதி வீட்டுக்காவலில் அடைத்துவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரை கைது செய்து ஒருமாதத்துக்கு மேலாகியும் இவ்விவகாரம் தொடர்பான வலுவான ஆதாரங்களை அரசுதரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால், உரிய காரணங்கள் இல்லாமல் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை காவலில் வைத்திருக்க முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி அவரை விடுதலை செய்வதாக இன்று உத்தரவிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட ஜெயில் தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மாலத்தீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கோர்ட்டு முடக்கி வைத்துள்ளது. #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenreleased