செய்திகள்

நைஜீரியா: தேர்தல் கலவரத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்

Published On 2019-02-24 09:01 GMT   |   Update On 2019-02-24 09:01 GMT
நைஜீரியா நாட்டின் பாராளுமன்றம் மற்றும் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலின்போது ஏற்பட்ட மோதல்களில் ஒரேநாளில் 16 பேர் உயிரிழந்தனர். #Nigeriaelection #Nigeriaelectionviolence
லாகோஸ்:

ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள்தொகை கொண்ட நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் 360 கீழ்சபை மற்றும் 109 மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்நாட்டின் வரலாறில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் அதிபர் முஹம்மது புஹாரி தலைமையிலான அனைத்து முன்னேற்றவாதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் பிறகட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்த தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்பட்ட மோதல்களில் 200-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பல இடங்களில் வாக்குச்சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



போர்னோ, யோபே, கோகி, லாகோஸ் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று ஏற்பட்ட மோதல்களில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் பதற்றமான பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #Nigeriaelection #Nigeriaelectionviolence
Tags:    

Similar News