செய்திகள்

உலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்

Published On 2019-01-20 09:56 GMT   |   Update On 2019-01-20 10:32 GMT
உலகில் மிகவும் வயதான நபர் என்று அறிவிக்கப்பட்டிருந்த மசாஸோ நோனாக்கா ஜப்பான் நாட்டில் தனது 113-வது வயதில் இன்று காலமானார். #oldestman #MasazoNonaka #managed113
டோக்கியோ:

உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது.

 அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து ஜப்பானில் கடந்த 2013-ம் ஆண்டில் மரணம் அடைந்த ஜிரோய்மோன் கிமுரா என்பவர்தான் கின்னஸ் சான்றுகளின்படி மிக அதிக காலம் வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.

அவருக்கு பின்னர் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை உலகில் மிக வயதான நபராக அறியப்பட்ட ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலிவேரா 29-1-2018 அன்று தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார்.

இதைதொடர்ந்து, ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(அப்போது வயது 112) என்பவரை உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக கின்னஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கீகரித்தது.

ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் கடந்த 25-7-1905 அன்று பிறந்த மசாஸோ நோனாக்கா, இளம்வயதில் விவசாயம் மற்றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்தார். 

பின்னர், அஷோரா பகுதியில் ‘ஸ்பா’ எனப்படும் அழகு நிலையம் நடத்திவந்த இவருக்கு இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இனிப்பு வகைகள் மற்றும் கேக் ஆகியவற்றை விரும்பி உண்ணும் இவரை சிறப்பிக்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  நடத்தப்பட்ட விழாவில் மசாஸோ நோனாக்கா தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஹொக்கைடோ தீவில் வாழ்ந்துவந்த மசாஸோ நோனாக்கா உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர். #oldestman #MasazoNonaka #managed113
Tags:    

Similar News