செய்திகள்

இசை நிகழ்ச்சியில் புகுந்து உயிர்ப்பலி வாங்கிய சுனாமி- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

Published On 2018-12-24 05:00 GMT   |   Update On 2018-12-24 05:00 GMT
இந்தோனேசியாவை தாக்கிய சுனாமிக்கு சுமார் 300 பேர் பலியாகி உள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் சுனாமி புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #Tsunami #IndonesiaTsunami
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சுமார் சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ஏராளமான மக்கள், அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி சுனாமிக்கு 281 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி அலை புகுந்து மக்களை அடித்துச் செல்லும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.



டான்செங் லெசங்க் கடற்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய டெண்ட் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர். பாடகர் மிகுந்த உற்சாகத்துடன் பாடிக்கொண்டிருந்த சமயம், திடீரென இசை நிகழ்ச்சிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. மேடையை உடைத்துக்கொண்டு தண்ணீர் புகுந்ததால் மேடை சரிந்து, அனைவரும் கீழே விழுகின்றனர். இசைக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.

இதில், இசைக்குழுவின் மேலாளர் மற்றும் ஒரு பாடகர் இறந்துவிட்டதாகவும், சிலரை காணவில்லை என்றும் அந்த இசைக்குழு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இசைக்குழு சார்பில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tsunami #IndonesiaTsunami



Tags:    

Similar News