செய்திகள்

தைவானில் 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின

Published On 2018-10-23 09:13 GMT   |   Update On 2018-10-23 09:13 GMT
தைவான் நாட்டில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. #TaiwanEarthquake #Taiwan
தைபே:

பயங்கர எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் தொடர்ந்து எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவ்வகையில், பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தைவான் நாட்டில் இன்று மதியம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹூவாலியன் கவுண்டி ஹாலில் இருந்து 104.2 கிமீ கிழக்கில் பூமிக்கடியில் 31.3 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 6.0 ஆக பதிவாகியிருந்தது.



இந்த நிலநடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது. கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகவோ, காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை. தைவான் அதிவேக ரெயில் சேவை மற்றும் தைவான் ரெயில்வே நிர்வாக ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரெயில்கள் வழக்கம்போல் இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூமிக்கடியில் நகரும் தன்மையுடைய இரண்டு டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில் தைவான் உள்ளது. எனவே, டெக்டோனிக் தட்டுகள் உராயும்போது ஏற்படும் நிலநடுக்கத்தின்போது தைவான் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதே ஹூவாலியன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 17 பேர் உயிரிழந்தனர். 1999ல் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 2400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #TaiwanEarthquake #Taiwan
Tags:    

Similar News