செய்திகள்

லிபியா கடல் பகுதியில் தத்தளித்த 60 அகதிகள் மீட்பு

Published On 2018-07-04 17:42 GMT   |   Update On 2018-07-04 17:42 GMT
லிபியா கடல் பகுதியில் தத்தளித்த அகதிகளை ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். #migrantboat
மாட்ரிட்:

மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். 

லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்

இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு கடந்த மாதம் 3-ம் தேதி துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கி காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இத்தாலி நாடு அனுமதி மறுத்ததால் லிபியா கடல் பகுதியில் 60க்கு மேற்பட்ட அகதிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் மீட்புக் கப்பலில் சென்று நடுக்கடலில் தத்தளித்த 60 அகதிகளை இன்று பத்திரமாக மீட்டனர்.

அவர்களில் 5 குழந்தைகள்,  5 பெண்கள் , 50 ஆண்கள் உள்பட மொத்தம் 60 பேர் இருந்தனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். #migrantboat
Tags:    

Similar News