செய்திகள்
பிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ராணி எலிசபெத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #PMModi #UKVisit #PMInLondon
லண்டன்:
பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார்.
அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். அதையடுத்து, பிரதமர் மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் கஸ்டாபை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சுவீடன் நாட்டில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று பிரிட்டன் வந்தார். ஹீத்ரோ விமானநிலையம் வந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி முதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
அதைத்தொடர்ந்து, லண்டனில் உள்ள அறிவியல் மியூசியத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் மியூசியத்தை சுற்றிப் பார்த்தனர். அதன்பின் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடி ராணி எலிசபெத்தை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள மத்திய வெஸ்மினிஸ்டர் அரங்கத்தில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் பிரிட்டன் வாழ் இந்திய மக்களிடையே உரையாற்றி வருகிறார். #PMModi #UKVisit #PMInLondon #tamilnews