செய்திகள்

சிரியாவில் அரசு படைகளில் வான்வழி தாக்குதலில் மேலும் 45 பேர் பலி

Published On 2018-03-05 19:09 GMT   |   Update On 2018-03-05 19:09 GMT
சிரியாவில் இடைக்கால போர்நிறுத்தத்தை மீறி கிழக்கு கூட்டா பகுதியில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் மேலும் 45 பேர் உயிரிழந்தனர். #SaveSyria #SyriaWar #EasternGhouta #SyriaIsBleeding
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்குமிடங்களை அழிக்கவும் ரஷிய நாட்டு படைகளின் துணையுடன் சிரியா ராணுவம் ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகிறது.



இதற்கிடையில், உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சிரியாவில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை ஒரு மாதத்துக்கு இடைக்கால போர்நிறுத்தம் செய்யும் சமரசத்தை ரஷியா உருவாக்கி தந்தது. இந்த போர்நிறுத்த நேரம் தவிர மற்ற வேளைகளில் இருதரப்பினரும் சரமாரியான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன். அந்த வகையில் கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா அரசு நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 45 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக நேற்று பின்னிரவில் இருந்து இன்று அதிகாலை வரை ஹுமேரிய்யே உள்ளிட்ட பகுதிகளில் அரசு விமானப்படைகள் நடத்திய பேரல் வெடிகுண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SaveSyria #SyriaWar #EasternGhouta #SyriaIsBleeding #tamilnews
Tags:    

Similar News