செய்திகள்

சிரியாவில் போர்நிறுத்தத்துக்கு இடையிலும் விமானப்படை தாக்குதல் - மேலும் 14 பேர் பலி

Published On 2018-03-05 09:11 GMT   |   Update On 2018-03-05 09:14 GMT
சிரியாவில் இடைக்கால போர்நிறுத்தம் அமலில் இருந்தும் அரசின் விமானப்படை நடத்திய தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்தனர். #airraids #Syria
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்குமிடங்களை அழிக்கவும் ரஷிய நாட்டு படைகளின் துணையுடன் சிரியா ராணுவம் ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சிரியாவில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை ஒரு மாதத்துக்கு இடைக்கால போர்நிறுத்தம் செய்யும் சமரசத்தை ரஷியா உருவாக்கி தந்தது. இந்த போர்நிறுத்த நேரம் தவிர மற்ற வேளைகளில் இருதரப்பினரும் சரமாரியான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதன் விளைவாக சில நகரங்களையும், விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் நேற்று அறிவித்தது.

இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது தலைமையகங்கள் மற்றும் ரகசிய குகைகள் போன்றவை அழிக்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.

இதைதொடர்ந்து, நேற்று பின்னிரவில் இருந்து இன்று அதிகாலை வரை ஹுமேரிய்யே உள்ளிட்ட பகுதிகளில் அரசு விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்தனர். #airraids #Syria #tamilnews
Tags:    

Similar News