செய்திகள்
எம்மர்சன் நாங்காவா

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக நாங்காவா 24-ம் தேதி பதவியேற்பு

Published On 2017-11-22 10:17 GMT   |   Update On 2017-11-22 10:17 GMT
ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காவா 24-ம் தேதி பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹரரே:

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக இருந்த நிலையில்,
கடந்த 15-ம் தேதி தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.

அதிபர் முகாபேவுக்கு எதிராக ராணுவம் கிளர்ந்துள்ளதற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்த நிலையில், முகாபே பதவி விலகவேண்டும் என ஆளும்கட்சி எம்.பி.க்கள் உள்பட அனைவரும் போர்க்கொடி தூக்கினர்.

ராபர்ட் முகாபே உடன் எம்மர்சன் நாங்காவா

இதனையடுத்து, நேற்று கூடிய பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில், முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ஆளும்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்து, அதன் மீது விவாதம் நடத்தினர். ஆனால், முகாபே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறிய சபாநாயகர், விவாதத்தை முடித்து வைத்தார்.

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்த படி முகாபேவால் நீக்கப்பட்ட முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவா, அந்நாட்டின் புதிய அதிபராக வரும் 24-ம் தேதி பதவியேற்க உள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக, தற்போது வெளிநாட்டில் இருக்கும் நாங்காவா இன்று நாடு திரும்ப உள்ளார்.
Tags:    

Similar News