செய்திகள்

லடாக் எல்லையில் கைகலப்பு: அத்துமீறி தாக்கியது இந்திய வீரர்கள் தான் என்கிறது சீனா

Published On 2017-08-21 13:47 GMT   |   Update On 2017-08-21 13:47 GMT
காஷ்மீர் மாநிலத்தின் லடாக் எல்லையில் நடைபெற்ற கைகலப்பு சம்பவத்தில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது இந்திய வீரர்கள் தான் என சீனா குற்றம்சாட்டியுள்ளது.
பீஜிங்:

காஷ்மீர் மாநிலத்தின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே சுதந்திர தினத்தன்று லேசான கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைய முயற்சித்ததாகவும், கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டது. டோக்லாம் விவகாரத்தின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லடாக் எல்லையில் நடைபெற்ற கைகலப்பு சம்பவத்தில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது இந்திய வீரர்கள் தான் என சீனா குற்றம்சாட்டியுள்ளது. 

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், “சீன எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் தங்கள் நாட்டில் உள்ள உண்மை எல்லைக் கோட்டு பகுதியில் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தின் போது இந்திய வீரர்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். அதில் சீன எல்லை பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். சீனா தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. இது குறித்து இந்தியாவிற்கான பிரதிநிதிகளிடம் புகார் தெரிவிப்போம்” என்றார்.


Tags:    

Similar News