செய்திகள்

துருக்கியின் கிரீக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

Published On 2017-07-21 02:29 GMT   |   Update On 2017-07-21 02:29 GMT
துருக்கி நாட்டின் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள போட்ரம் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அங்காரா:

துருக்கி நாட்டின் கிரீக் தீவுகளில் போட்ரம் மற்றும் டாட்கா நகரங்களில் இன்று அதிகாலை 1.31 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானது. ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதால், தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஒன்றுதிரண்டனர். இந்த திடீர் நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், படுகாயம் அடைந்த 100க்கு மேற்பட்டவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. துருக்கி மற்றும் கிரீக் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் பலியானது
குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News