செய்திகள்

மான்செஸ்டர் குண்டு வெடிப்பு: முக்கிய குற்றவாளியின் தந்தை, சகோதரர் லிபியாவில் கைது

Published On 2017-05-24 23:31 GMT   |   Update On 2017-05-24 23:31 GMT
22 பேரை பலிகொண்ட இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் தந்தை மற்றும் சகோதரர் லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திரிபோலி:

22 பேரை பலிகொண்ட இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் தந்தை மற்றும் சகோதரர் லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மான்செஸ்டர் தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் இயக்கத்தினர் அறிவித்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தற்கொலைப்படை தீவிரவாதியை போலீசார் நேற்று அறிவித்தனர்.

லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதே தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

இந்நிலையில், லிபியாவில் இருக்கும் அபேதியின் தந்தை மற்றும் சகோதர் ஹசீம் அபேதி ஆகியோரை அந்நாட்டு காவல் துறையினர் இன்று கைது செய்தனர். இந்த தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதி கைது செய்துள்ளதாகவும், விசாரணைக்கு பின்னர் மற்ற தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News