செய்திகள்

சிலியில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்

Published On 2017-04-25 07:05 GMT   |   Update On 2017-04-25 07:05 GMT
தென்அமெரிக்க நாடான சிலியில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
காண்டியாகோ:

தென்அமெரிக்க நாடான சிலியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் காண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர்.



இதற்கிடையே அங்கு 6.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காண்டியாகோவில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வல்பாறைசோ நகரை மையமான கொண்டு நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

இது கடலுக்கு அடியில் 25 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 30 வினாடிகள் அதிர்ந்து குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நிலநடுக்கம் உருவான வல்பாறைசோ கடலில் வழக்கத்துக்கு மாறாக உயரமான அலைகள் எழுந்தன. எனவே சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டது. சிறிது நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

சிறிய அளவில் 15 செ.மீ அளவில் மட்டுமே அலைகள் உருவானதாக தெரிவிக்கப்பட்டது. நில நடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் இழப்போ இதுவரை வெளியாகவில்லை என சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் தெரிவித்துள்ளார்.

Similar News