செய்திகள்

‘விசா’ தடை விதித்த 8 நாளில் வெள்ளை மாளிகை பணியில் இருந்து முஸ்லிம் பெண் நீக்கம்

Published On 2017-02-27 06:03 GMT   |   Update On 2017-02-27 06:03 GMT
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு 7 நாடுகளுக்கு 'விசா' தடை விதித்ததை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் பணியில் இருந்த முஸ்லிம் பெண் நீக்கம் செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ருமானா அகமது என்ற பெண் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.

இவர் வங்காளதேச வம்சாவளியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஆவார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒபாமா அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்தார். பணியின் போது தலையில் ‘ஹிஜாப்’ அணிந்து இருப்பார்.



புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ஈராக், ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ தடை விதித்தார். இந்த நிலையில் ருமானா அகமது திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். ‘விசா’ தடை விதித்த 8 நாட்களில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக ருமானா அகமது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் தனது நிர்வாகத்தில் அவர் பல்வேறு மாற்றங்கள் செய்தார். அது போன்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு புதிய தலைவர் மற்றும் உதவியாளர்கள், நியமிக்கப்பட்டனர்.

இந்த அடிப்படையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக ருமானா அகமது தெரிவித்துள்ளார்.

Similar News