செய்திகள்
அலெப்போ நகர் அருகே முன்னேறி வரும் சிரிய ராணுவம்
சிரியாவின் அலெப்போ நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிபர் ஆசாத் ஆதரவு அரசு தரப்பு ராணுவம் முன்னேறி வருகிறது.
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக
சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.
சிரியா நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசமுள்ள பல முக்கிய நகரங்களை அரசுப் படைகள் கைப்பற்றி விட்டன. சில இடங்களில் மட்டும் இழந்த இடத்தை மீட்கவும், இருக்கும் இடத்தை பறிகொடுக்காமல் இருக்கவும் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
கிழக்கு அலெப்போ நகரை சிரிய அரசு ஆதரவு படைகள் மீட்டுள்ள நிலையில், அலெப்போ நகரின் இதர பகுதிகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிரியாவின் அலெப்போ நகரை நோக்கி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு ஆதரவு மற்றும் அதன் கூட்டுப்படை
ராணுவம் முன்னேறி வருவதாக கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் வடமேற்கு பகுதியில் சுமார் 14 கிராமங்கள் கூடுதலாக அரசு தரப்பு படைகளின் வசம் வந்தது.