செய்திகள்

மாலியில் நடந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 14 பேர் பலி

Published On 2017-01-23 18:50 GMT   |   Update On 2017-01-23 18:50 GMT
ஆப்பிரிக்க நாடான மாலியில் டின் அஸ்சாக்கோ என்ற இடத்திற்கு அருகேயுள்ள ஒரு சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பமாக்கோ:

ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த குழுக்கள் இடையே மோதல்கள் நடந்தும் வருகின்றன. அங்கு ஐ.நா. அமைதிப்படை இருந்து அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அங்கு வடக்கு காவோ பகுதியில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது கடந்த 18-ந் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

இதையொட்டி அங்கு நாடு முழுவதும் நேற்று முன்தினம் துக்க தினம் கடைப்பிடிக்க அதிபர் இப்ராகிம் பாவ்பக்கர் கீய்ட்டா அழைப்பு விடுத்தார். அதன்படி தலைநகர் பமாக்கோவில் மக்கள் கூடி, தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இதற்கு இடையே அங்கு கிடல் பகுதியில் டின் அஸ்சாக்கோ என்ற இடத்திற்கு அருகேயுள்ள ஒரு சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட அனைவரும் அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Similar News