செய்திகள்

ஈராக்கில் இலக்கு தவறிய வான் தாக்குதல்: 55 பொதுமக்கள் உயிரிழப்பு

Published On 2016-12-08 09:40 GMT   |   Update On 2016-12-08 09:40 GMT
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள நகர் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் ஒன்றில் தவறுதலாக பொதுமக்கள் 55 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதியை மீட்பதற்காக ஈராக் விமானப்படையுடன், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வகையில் ஈராக்கின் மேற்கு பகுதியில் சிரியா எல்லையை ஒட்டியுள்ள காயிம் நகர் மீது நேற்று அடுத்தடுத்து விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு மசூதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், காயிம் நகரில் உள்ள மார்க்கெட்டில் தவறுதலாக சில குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலில் 12 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 55 பேர் பலியாகி இருப்பதாக காயிம் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 8 தீவிரவாதிகளின் உடல்கள் மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈராக் விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி இனப்படுகொலை செய்ததாகவும், இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்பர் மாகாண கவுன்சில் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.

Similar News