செய்திகள்

கானாவில் இயங்கிய போலி அமெரிக்க தூதரகம் 10 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டது

Published On 2016-12-05 15:58 GMT   |   Update On 2016-12-05 15:58 GMT
கானா தலைநகரில் சுமார் பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர்.
அக்ரா: 

கானாவின் தலைநகரமான அக்ராவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்த தூதரகம் மூலம் போலியாக பல்வேறு நாடுகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்திருப்பதாக அம்மாநில காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கானா மற்றும் துருக்கியைச் சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் இந்த போலி தூதரகத்தை இயக்கி வந்ததாக கானாவின் வழங்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 போலி தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பத்து நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பாஸ்போர்ட்களும், அமெரிக்கா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போலி விசாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. போலி தூதரகத்தின் சேவை கட்டணங்கள் 6000 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், எத்தனை பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல் இல்லை. 

போலி தூதரகத்தை இயக்கி வந்த நபர்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கானாவின் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து மேலும் பல தகவல்களை பெற்று வருவதால் இது குறித்து விரிவான தகவல் அளிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.    

'போலி தூதரகம் இயங்கி வந்தது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. கைப்பற்றப்பட்ட விசாக்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல பயன்படுத்தக் கூடிய நிலையிலேயே இருந்தது, மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது,' என பெயர் தெரிவிக்க விரும்பாத கானா அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News