செய்திகள்

மூன்றாம் உலகப் போர் மூளும்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

Published On 2016-10-26 09:39 GMT   |   Update On 2016-10-26 09:39 GMT
ஹிலாரி கிளிண்டனின் யோசனைப்படி சிரியா விவகாரத்தில் செயல்பட்டால் அதன் விளைவாக மூன்றாம் உலகப் போர் மூளும் என அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன்:

சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்டுவரும் விமான தாக்குதல்களில் பலர் பலியாவதை தடுக்கும் வகையில் அந்நாட்டின் முக்கிய பகுதிகளை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் யோசனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், சிரியா விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டனின் யோசனைப்படி செயல்பட்டால் அதன் விளைவாக மூன்றாம் உலகப் போர் மூளும் என எச்சரித்துள்ளார்.

’சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்டநாள் கொள்கையைவிட தற்போது அங்கு தலையெடுத்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அதை தவிர்த்து, ஹிலாரி கிளிண்டன் யோசனைப்படி, சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு தீர்வுகாண முயன்றால் அந்த நடவடிக்கையானது, மூன்றாம் உலகப் போரை நோக்கி தள்ளிவிடும்’ என டிரம்ப் கூறியுள்ளார்.

Similar News