செய்திகள்

சவுதி அரேபியாவில் திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து செய்த தம்பதி

Published On 2016-10-25 06:13 GMT   |   Update On 2016-10-25 06:13 GMT
சவுதி அரேபியாவில் திருமணமான 2 மணி நேரத்தில் ஒரு தம்பதியினர் விவாகரத்து பெற்றனர்.

ஜெட்டா:

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது.

திருமணத்துக்கு முன்னதாக பெண் வீட்டாருக்கு மணமகன் ஒரே ஒரு நிபந்தனை விதித்து இருந்தார். அதன்படி திருமண நிகழ்ச்சிகள் குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகள் உள்ளிட்ட எதுவும் சமூக வலை தளங்களில் மணமகளால் பதிவேற்றம் செய்யக் கூடாது என்பதாகும்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னரும் தனது மனைவி சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் ஆர்வ மிகுதியால் மணமகள் தனது தோழிகளுக்கு திருமண போட்டோவை ‘ஸ்னாப்சாட்’ வழியாக அனுப்பி வைத்தார்.

இதை அறிந்த மணமகன் அதிர்ச்சி அடைந்தார். தனது நிபந்தனையை மீறி தனது மனைவி நடந்து கொண்டாரே என ஆத்திரம் அடைந்தார். தனது நிபந்தனைக்கு கட்டுப்படாத பெண்ணுடன் வாழ்வதில் அர்த்தமில்லை எனக் கூறி உடனடியாக விவாகரத்து கேட்டார்.

அதை தொடர்ந்து 2 குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் முடிந்து இரண்டே மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து கோரியது மிக கடுமையான செயல் என மணமகள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதே போன்று இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுதி அரேபியாவில், ஒரு சம்பவம் நடந்தது. திருமணம் முடிந்து முதலிரவை கொண்டாடும் போது தனது கணவரை கண்டு கொள்ளாமல் சமூக வலை தளங்களில் மட்டுமே கவனம் செலுத்திய மணப்பெண் விவாகரத்து செய்யப்பட்டார்.

Similar News